வாஷிங்டன்: சவுதி அரேபியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஒரு மாத போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் சம்மதித்துள்ளதாகவும், இனி இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியது ரஷ்யாதான் ’’ என அமெரிக்கா கூறியுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் அமெரிக்கா சென்று அதிபர் ட்ரம்பை சந்தித்தபோது, ரஷ்யாவுடன் போர் நிறுத்தம், அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. இதனால் உக்ரைன் குழு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியது. உக்ரைனுக்கு ஆயுத உதவியை உடனடியாக நிறுத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எப்போது வேண்டுமானாலும் வரலாம் என கூறினார்.
இதையடுத்து சவுதி அரேபியாவில் உக்ரைன் குழுவினருடன், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அதிபர் ஜெலன்ஸ்கியும் சவுதி அரேபியா சென்றிருந்தார். அப்போது அமெரிக்கா தெரிவித்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக் கொண்டது. ரஷ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் உக்ரைன் சம்மதம் தெரிவித்தது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையில், ‘‘ போர் நிறுத்தம் செய்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை உக்ரைன் ஏற்றுக்கொண்டுள்ளது. இனி இந்த விஷயத்தை நாங்கள் ரஷ்யாவிடம் கொண்டு செல்வோம். அமைதி பேச்சுவார்த்தைக்கு அவர்கள் ஒத்துக் கொள்வர் என நம்புகிறோம்’’ என்றார்.