`கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பதே பாஜக-வின் கோட்பாடு' – சொல்கிறார் அண்ணாமலை

திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வருகை தந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ”மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக 10 லட்சம் பேரிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளது. மே மாதம் முடியும்போது ஒரு கோடி கையெழுத்துக்கள் என்கிற இலக்கை எட்டுவோம்.  தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மும்மொழி படிக்கக்கூடிய மாணவர்கள் மொத்தமே  ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர்தான் உள்ளனர் என்று கூறுகிறார்.

அண்ணாமலை

தமிழகத்தில் 1,635 சி.பி.எஸ்.இ பள்ளிகள் உள்ளன. 479 மெட்ரிகுலேசன் பள்ளிகள் உள்ளன. இங்கு தமிழ் மொழியும் வேறு மொழிகளும் படிக்கிறார்கள். அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் இந்திய குடிமகனா? தமிழகத்தில் எந்த எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் குழந்தைகள் இரு மொழிக் கொள்கை படிக்கிறார்கள்? அரசு பள்ளியில் படிக்கக்கூடிய 52 லட்சம் குழந்தைகளுக்கும் தனியார் பள்ளியில் படிக்கக்கூடிய குழந்தைகளுக்கும் சமமான கல்வி இருக்க வேண்டும்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை திவாலாகி உள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் மொழியைத் தவிர ஆங்கில மொழி எழுத்து படிக்கக்கூடியவர்கள் அதிகமாக உள்ளனர். 27 சதவீதம் பேர் ஆங்கிலத்தை எடுத்து படிக்கின்றனர். தமிழகத்தில் கற்றல் அறிவு குறைந்துள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். அரசு பள்ளி மாணவர்கள் இப்படித்தான் படிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் கனிமொழிக்கு என்ன உள்ளது?  கனிமொழி மகனுக்கு ஒரு நியாயம், ஏழை மாணவர்களுக்கு ஒரு நியாயமா? 

அண்ணாமலை

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? பள்ளிகளில் கற்றல் திறன் குறைகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும். தி.மு.க-விற்கு தேர்தல் நிதி மதுபான ஊழலில்தான் வருகிறது. டாஸ்மாக் நிறுவன மதுபானக் கொள்ளையை இவர்கள்தான் வடிவமைக்கிறார்கள். தமிழகத்தில் பெண்களின் தாலியை எடுத்து ஆட்சியாளர்கள் ஆட்சியில் அமர்ந்துள்ளார்கள் என்பதுதான் இன்றைய நிலை.

மதுபான ஊழல் வெளியே வந்து விடக் கூடாது என்பதற்காக தி.மு.க அதிகமாக நாடகமாடி வருகிறது. இது ஜனநாயக நாடு, இலங்கை நட்பு ரீதியான நாடு. இலங்கையில் மார்க்சிஸ்ட் சித்தாந்தம் கொண்ட தலைவராக இருக்கிறார். சீனாவோடு நெருக்கமாக உள்ள தலைவர். ஆகவே நாம் சமாதானமாக செல்கிறோம். மீனவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக  தமிழக மீனவர்கள் 36 பேர் தமிழக பா.ஜ.க-வினரோடு சேர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க உள்ளனர்.

அண்ணாமலை

பிரதமர் ஏப்ரல் மாதம் இலங்கைக்குச் செல்ல இருக்கிறார். கச்சத்தீவை தாரை வார்த்து விட்டார்கள். அதனை திரும்ப கொண்டு வர வேண்டும் என்பதே பாஜக-வின் கோட்பாடு” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.