குஜராத்தில் தாறுமாறாக ஓடிய கார் மோதி பெண் உயிரிழப்பு – ‘குடிபோதை’ இளைஞர் கைது

காந்திநகர்: குஜராத்தின் வதோதராவில், குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் வேகமாக காரை ஓட்டிச் சென்று இரு சக்கர வாகனங்களில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்ததார்.

இது குறித்து துணை ஆணையர் பன்னா மோமயா கூறுகையில், “இந்த விபத்து அதிகாலை 12.30 மணியளவில் கரேலிபாக் பகுதியில் உள்ள முக்தானந்த் குறுக்குச் சாலையில் நடந்துள்ளது. விபத்துக்கு காரணமான மாணவர் ராக்‌ஷித் சவுராசியா கைது செய்யப்பட்டுள்ளார். வாகனத்தை ஓட்டியபோது ரக்‌ஷித் போதையில் இருந்திருக்கலாம். விபத்தில் உயிரிழந்த பெண் ஹேமாலி படேல் என்றும், விபத்து நடந்த போது அவர் அந்த வழியாக தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். மாணவர் ரக்‌ஷித் உத்தரப் பிரதேசத்தின் வாராணசியைச் சேர்ந்தவர். சட்டக் கல்லூரி மாணவரான அவர், இங்கு ஒரு தங்கும் விடுதியில் தங்கி படித்துவருகிறார்.

விபத்துக்கு காரணமான கார், ரக்‌ஷித்தின் நண்பர் மிட் சவுகானுக்குச் சொந்தமானது. விபத்தின்போது அவரும் காரில் இருந்துள்ளார். முக்தானந்த் வளைவில் வேகமாக காரை ஓட்டி வந்த ரக்‌ஷித் சில இருசக்கர வாகனங்களின் மீது மோதியுள்ளார். தலைமறைவான சவுகானைத் தேடிவருகிறோம். வாகனத்தை ஓட்டியவர் போதையில் இருந்தாரா என்பதை உறுதி செய்ய அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

விபத்தின் போது அதை நேரில் பார்த்தவர் பதிவுசெய்த வீடியோ காட்சியில், முன்பகுதி சேதமான காரில் இருந்து வெளியே வரும் சவுகான், இந்த விபத்துக்கு சவுராசியா தான் காரணம் என குற்றம்சாட்டுகிறார். அவரைத் தொடர்ந்து ஓட்டுநர் இருக்கையில் இருந்து இறங்கி வந்த சவுராசியா, இன்னொரு சுற்று.. இன்னொரு சுற்று என கூச்சலிடுகிறார். அவரை அருகில் இருப்பவர்கள் தாக்குகின்றனர். பின்னர் அவர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுகிறார். விபத்து குறித்து ஊடகங்களில் வெளியான சிசிடிவி காட்சிகளில், வேகமாக வந்த கார் 2 இரு சக்கர வாகனங்களில் மோதி, அதில் வந்தவர்களை இடித்துத் தள்ளிச் சென்று நிற்பது பதிவாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.