திருவனந்தபுரம்: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு திமுக சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அமைச்சர் பி.டி. தியாகராஜன், திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர், முதல்வர் மு.க. ஸ்டாலினின் அழைப்புக் கடிதத்தை வழங்கினர். மேலும், கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
இதனையடுத்து, இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பி.டி.தியாகராஜன், “முதல்வர் மு.க. ஸ்டாலின் சர்பாக, நானும், தென் சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியனும் திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தோம். நியாயமற்ற முறையிலான தொகுதி மறுவரையறை திட்டத்தை கூட்டாக எதிர்க்கும் நோக்கில் மார்ச் 22-ம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்திற்கான முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பை நாங்கள் வழங்கினோம். இந்த தொகுதி மறுவரையறை என்பது, கூட்டாட்சி தத்துவத்துக்கும், மாநிலங்களின் பிரதிநிதித்துவ உரிமைக்கும் எதிரான மறுக்க முடியாத தாக்குதலாகும்.
இந்த விஷயத்தில் தமிழ்நாட்டுக்கான தனது வலுவான ஆதரவை கேரள முதல்வர் வெளிப்படுத்தினார். மேலும், ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்தவும் நமது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் கூட்டுப் போராட்டத்திற்கான தனது முழுமையான ஆதரவை உறுதி செய்தார்” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இன்று (14.03.2025), திருவனந்தபுரத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்கக் கோரி, கேரள் முதல்வர் பினராயி விஜயனை, திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சார்பில், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பி.பி.தியாகராஜனும், நானும் சந்தித்து, அழைப்பு விடுத்தோம். இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் மாஸ்டர் கோவிந்தனையும் சந்தித்து அழைப்பு விடுத்தோம்” என குறிப்பிட்டுள்ளார்.
பின்னணி: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை குறித்த ஆலோசனைக் கூட்டத்தை சென்னையில் வரும் 22-ம் தேதி நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. தொகுதி மறுவரையறையில் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய 7 மாநிலங்களின் மக்களவை பிரதிநிதித்துவம் குறையும் என திமுக கூறி வருகிறது.
இது தொடர்பாக கடந்த 5-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இதில், தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்தும் ஆலோசிக்க கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சென்னையில் மார்ச் 22-ல் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அந்தந்த மாநிலங்களின் முக்கிய கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். இந்த பின்னணியில், முதல்வரின் அழைப்பை நேரில் தெரிவிப்பதற்காக, முதல்வரின் பிரதிநிதிகளாக திமுக மூத்த தலைவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று நேரில் அழைப்பு விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.