சென்னை: கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கவும், தமிழகத்தில் அந்நோயை அறவே அகற்றிடவும், HPV (Human Papilloma Virus) தடுப்பூசியை 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக வழங்கவும் ரூ.36 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மாநில அளவிலான முதன்மை புற்று நோய் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தரம் உயர்த்தி, 800 படுக்கைகளுடன் கூடிய, தன்னாட்சி பெற்ற மையமாக செயல்படும் வகையில் ரூ.120 கோடி நிதி வழங்கப்படும்.
இடைநிலை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், புற்றுநோயைக் கண்டறிவதற்கான நவீன மருத்துவக் கருவிகள் உள்ளிட்டவை வழங்க ரூ.110 கோடி ஒதுக்கப்படும். கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கவும், தமிழகத்தில் அந்நோயை அறவே அகற்றிடவும், HPV (Human Papilloma Virus) தடுப்பூசியை 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக வழங்கவும் ரூ.36 கோடி நிதி ஒதுக்கப்படும். நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் புற்றுநோய் மற்றும் இதய நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், வாழ்க்கைமுறை மாற்றங்கள் குறித்து ஆலோசனை வழங்குதல் ஆகியவற்றுக்காக ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொற்றா நோய்களின் பாதிப்புகளை எதிர்கொள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் இல்லங்களுக்கே சென்று, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை உள்ளிட்ட சேவைகள் 2.20 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. இன்னுயிர் காப்போம் திட்டம் – நம்மைக் காக்கும் 48’ திட்டம் மூலம் 3,43,156 பேருக்கு ரூ.302 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய நலவாழ்வுக் குழுமம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ரூ.2,754 கோடி, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு 1,092 கோடி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.1,461 கோடி, அவசர ஊர்தி சேவைகளுக்கு ரூ.348 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் தமிழக பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ரூ.21,906 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.