உக்ரைனில் போர்நிறுத்தம்; புதினுக்கு உலக தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் – இங்கிலாந்து பிரதமர்

மாஸ்கோ,

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. அதே சமயம், ரஷியாவுக்கு வடகொரியா மறைமுகமாக உதவி வருகிறது.

இதற்கிடையில், உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், உக்ரைனின் போர்நிறுத்த திட்டம் குறித்து கருத்து தெரிவித்த ரஷிய அதிபர் புதின், போர்நிறுத்தம் குறித்து விவாதிக்க ரஷியா தயாராக உள்ளது என்றும், ஆனால் போர்நிறுத்தத்தின் விதிமுறைகள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் புதின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், உக்ரைனில் போர்நிறுத்தம் கொண்டுவர புதினுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார். மேலும், புதின் விரைவில் பேச்சுவார்த்தைக்கு வருவார் என்று கெய்ர் ஸ்டார்மர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.