ஈராக் உளவுத்துறையுடன் இணைந்து அமெரிக்கப்படை நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகளை கவனித்து வந்த முக்கியத் தலைவர் அபு காதிஜா உயிரிழந்தார்.
ஈராக்கில் தீவிரவாத தடுப்பு நடுவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க அமெரிக்க வீரர்கள் 2,500 பேர் முகாமிட்டுள்ளனர். ஈராக்கின் தொலைதூர பகுதிகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் 2-வது இடத்தில் உள்ள முக்கியத் தலைவர் அபு காதிஜா. இவர் உலகின் பல நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகளை ஈராக்கில் இருந்தபடியே கவனித்து வந்தார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு தேவையான ஆயுதங்கள், பொருட்கள், நிதி ஆகியவற்றை இவர் பல நாடுகளுக்கு அனுப்பி வந்தார். ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இவரது கட்டுப்பாட்டில் இருந்து வந்தனர். இவருக்கு அமெரிக்கா கடந்த 2023-ம் ஆண்டே தடை விதித்திருந்தது.
ஈராக்கின் அல் அன்பர் பகுதியில் அபு காதிஜாவின் நடமாட்டம் இருப்பதாக ஈராக் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இத்தகவல் அங்குள்ள அமெரிக்க ராணுவத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அபு காதிஜா தீவிரமாக கண்காணிக்கப்பட்டார். அபு காதிஜா பற்றிய தகவல் உறுதி செய்யப்பட்டதும், அங்கு அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அபு காதிஜா மற்றும் அவருடன் இருந்த மற்றொரு ஐஎஸ்ஐஎஸ் தீவிராதியும் உயிரிழந்தனர். அவர்கள் தற்கொலைப் படையினர் அணியும் வெடி குண்டுகள் பொருத்தப்பட்ட உடையை அணிந்திருந்தனர். டிஎன்ஏ பரிசோதனைக்குப்பின் அபு காதிஜாவின் உயிரிழப்பை ஈராக் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதையடுத்து ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ கமாண்டர் ஜெனரல் மைக்கேல் எரிக் குரில்லா கூறுகையில், ‘‘ ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் நடவடிக்கைகளை உலகம் முழுவதும் கவனித்து வந்த முக்கிய தலைவர் அபு காதிஜா. அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை நாங்கள் தொடர்ந்து வேட்டையாடி ஒழிப்போம்’’ என்றார்.
அபு காதிஜா கொல்லப்பட்டதை வரவேற்றுள்ள ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி, ‘‘ஈராக் மற்றும் உலக நாடுகளுக்கு மிகவும் அபாயகரமான தீவிரவாதிகளில் ஒருவராக இருந்து வந்த அபு காதிஜா இருந்து வந்தார். அமெரிக்க ராணுவ உதவியுடன் இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டது’’ என்றார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ இராக்கில் ஐஎஸ்எஸ் தலைவர் அமெரிக்க ராணுவத்தினர் வேட்டையாடியுள்ளனர். அவரது பரிதாப வாழ்க்கை முடிவடைந்துவிட்டது. அவருடன் மற்றொரு தீவிரவாதியும் உயிரிழந்தார். இராக் மற்றும் குருது அரசு ஒத்துழைப்புடன் இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டது’’ என தெரிவித்துள்ளார்.