மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்: சந்திரபாபு நாயுடு

அமராவதி: மக்களின் அன்றாட பிரச்சினைகளை அறிந்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்று கட்சி எம்எல்ஏக்களுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தினார்.

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், தனுகு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசுகையில், “நான் 41 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் (மார்ச்-15) சட்டப்பேரவையில் முதன்முதலில் அடி எடுத்து வைத்தேன். நான் எங்கு சென்றாலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் அத்தொகுதி பிரச்சினைகள் குறித்து கேட்டறிவேன். எம்எல்ஏக்களும் இதனை பின்பற்றி மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்

தெலுங்கு தேசம் கட்சி ஆந்திர மாநிலத்தில் ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துள்ளது. கட்சியை நாம் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதுடன் மக்கள் பிரச்சினைகளையும் திறம்பட கையாள வேண்டும்.

சூப்பர் சிக்ஸ் திட்டங்களில் சிலவற்றை நாம் அமல்படுத்தி உள்ளோம். எஞ்சிய திட்டங்களை மத்திய அரசின் உதவியுடன் கண்டிப்பாக அமல்படுத்துவோம். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சி உறுப்பினர் அட்டையை நாம் புதுப்பித்து வருகிறோம். தற்போது 1.2 கோடி பேர் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர்களாக உள்ளனர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.