அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஏமனில் 53 பேர் பலி

வாஷிங்டன் டி.சி.,

ஏமன் நாட்டில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனா மற்றும் சவுதி அரேபியா எல்லையருகே அமைந்த கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் நிறைந்த சாடா மாகாணம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஏமனில் இருந்து இந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் செங்கடல் பகுதியில் அமெரிக்க கப்பல்களை வழிமறித்து தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். பிற நாடுகளின் கப்பல்கள், விமானம் மற்றும் ஆளில்லா விமானங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு எதிராக சர்வதேச நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்கர்களுக்கு எதிராக கடற்கொள்ளை, வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும், ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று உத்தரவிட்டார். தீர்க்கம் நிறைந்த மற்றும் சக்தி வாய்ந்த நடவடிக்கைகளை எடுக்கும்படி டிரம்ப் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, விமானந்தாங்கி கப்பலில் இருந்து போர் விமானங்கள் புறப்பட்டு சென்றன. இதுபற்றிய வீடியோவும் வெளியானது. இதன் தொடர்ச்சியாக, ஏமனில் நடந்த வான்வழி தாக்குதலில் 24 பேர் பலியானார்கள்.

ஹவுதிக்கு ஆதரவு அளித்து வரும் ஈரானுக்கும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். ஹவுதிக்கான ஆதரவை உடனடியாக நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது என கூறினார். மத்திய கிழக்கு பகுதியில் இது மிக பெரிய ராணுவ நடவடிக்கையாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தாக்குதல் இன்னும் சில வாரங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி ஹவுதி அமைப்பால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்பட இதுவரை 53 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு cள்ளது.

ஏமன் தலைநகர் சனா மற்றும் சவுதி அரேபியா எல்லையருகே கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் நிறைந்த சாடா உள்ளிட்ட பிற மாகாணங்களை இலக்காக கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இதற்கு பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அரசியல் பிரிவினர் சார்பில் கூறப்பட்ட செய்தியில், அமெரிக்காவின் ஹாரி எஸ். ட்ரூமேன் என்ற விமானந்தாங்கி கப்பலை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானம் ஒன்றை கொண்டு தாக்கினோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்ட செய்தியில், அப்படி எதுவும் எங்களுடைய வீரர்களால் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கின்றது. இது போர் குற்றம் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏமனில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் கட்டுக்குள் கொண்டு வரும்படி ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் அன்டானியோ குட்டெரஸ் கூறியுள்ளார். ஏழ்மையான அரபு நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஏமனில், இந்த தாக்குதலால் மக்கள் சமூகத்திற்கு பேராபத்து ஏற்படும் சூழல் உள்ளது என எச்சரித்து உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.