மும்பை விமான நிலையத்தில் ரூ.8.47 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் – 5 பேர் கைது

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 4 வெவ்வேறு சம்பவங்களில் ரூ.8.47 கோடி மதிப்பிலான 10 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமான நிலைய ஊழியர்கள் 3 பேர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெற்ற தேடுதல் வேட்டைகளில் சுங்கத்துறை அதிகாரிகள் இந்த தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். தங்கத்தை கடத்தி வந்தவர்கள் தங்கள் உள்ளாடைகள், பைகள் உள்ளிட்டவற்றில் தங்கத்தை மறைத்து கடத்தி வர முயற்சி செய்தபோது அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.

முதலாவதாக விமான நிலைய ஊழியர் ஒருவர் 2.8 கிலோ எடை கொண்ட ரூ.2.27 கோடி மதிப்பிலான தங்கத்தை மெழுகு வடிவில் கடத்த முயற்சித்தபோது அதிகாரிகளிடம் பிடிபட்டார். அதே போல் மற்றொரு ஊழியர் 2.9 கிலோ எடை கொண்ட ரூ.2.36 கோடி மதிப்பிலான தங்கத்தை உள்ளாடைகளில் மறைத்து எடுத்துச் செல்ல முயன்றபோது சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மூன்றாவது சம்பவத்தில் 1.6 கிலோ எடை கொண்ட ரூ.1.31 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒரு விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நான்காவது சம்பவத்தில், சர்வதேச விமானத்தின் குப்பைகள் அடங்கிய பைகளில் இருந்து 3.1 கிலோ எடை கொண்ட ரூ.2.53 கோடி மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.