நியூசிலாந்துக்கு எதிரான டி20; பாகிஸ்தான் வீரருக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி

துபாய்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி கடந்த 16ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், முதல் போட்டியில் போட்டி விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷாவுக்கு ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது நியூசிலாந்து பந்துவீச்சாளர் ஸகாரி பால்க்ஸை வேண்டுமென்றே மோதியதாக குஷ்தில் ஷா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதனை கள நடுவர்களும் உறுதிசெய்தனர்.

இது ஐ.சி.சி விதிகளுக்கு எதிரானது என்பதால், குஷ்தில் ஷாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிப்பதுடன், மூன்று கரும்புள்ளிகளையும் விதிப்பதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. குஷ்தில் ஷா கடந்த 24 மாதங்களில் செய்த முதல் குற்றம் இது என்பதால் அவருக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.