தேனி அருகே தப்புகுண்டுவில் உள்ள தேனி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நாய் பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் நாய் கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக காவல்துறையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவை சேர்ந்த மோப்ப நாய்களான வெற்றி, வீரா, பைரவ், லக்கி ஆகிய நாய்கள் செயல்பாடுகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, நாய் கண்காட்சி நிகழ்ச்சியில் நாட்டு நாய் வகையான கோம்பை , ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை மற்றும் வெளிநாட்டு இன நாய் வகைகளான லேப்ரடார், ஜெர்மன் ஷெஃபர்ட், பாக்ஸர், ராட்வில்லர், அமேரிக்கன் பிட்புல், பக் என 15 க்கும் மேற்பட்ட நாய் இனங்கள் கண்காட்சியில் பங்கேற்றன.
மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின் கண்காட்சியில் பங்கேற்ற நாய்கள், அதன் உரிமையாளர்களின் உத்தரவுக்கு பணிந்து செயல்பட்டது காண்போரை ஆச்சர்யப்படுத்தியது. நாய்களின் உடல் கட்டமைப்பு அதன் வளர்ச்சி உரிமையாளரின் உத்தரவுக்கு கீழ் பணிதல் உள்ளிட்டவை நடுவார்களால் கணக்கிடப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்டது.

இதில் சிறந்த நாய்கள் என்ற முதல் இரண்டு இடங்களை கோம்பை இன நாய்கள் பிடித்தன. அதனைத் தொடர்ந்து அவற்றின் உரிமையாளரான மதுரையைச் சேர்ந்த ஷியாம் மற்றும் பொள்ளாச்சியைச் சேர்ந்த ராமநாதன் ஆகியோருக்கு தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் தேனி, மதுரை, விருதுநகர், கோவை, சிதம்பரம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்… கேரளாவிலிரந்தும் சுமார் 50க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன.