கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புலியூர், காளிபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஒருவர் என மொத்தம் இரண்டு ஆசிரியர்கள் மட்டும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்தப் பள்ளியில் ஆசிரியர், மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை பள்ளியில் படிக்கும் மாணவிகளை கொண்டு தலைமை ஆசிரியர் சுத்தம் செய்ய வைப்பதாக பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில், மாணவிகள் கழிவறைகளை சுத்தம் செய்யும் வீடியோ ஓன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து மாவட்டக் கல்வி அலுவலர் முருகேசன், “தான்தோன்றிமலை வட்டார கல்வி அலுவலரை (பிஇஓ) நேரில் அனுப்பி விசாரணை செய்யப்படும்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியில் கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். அரசுப் பள்ளி மாணவிகளை வைத்து பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாகச் சொல்லப்படும் விவகாரம், கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.