சூடான்: தோரா கிராமத்தில் பயங்கர வான்தாக்குதல்- 54 பேர் பலி

கார்டூம்,

சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வடக்கு டார்பூர் மாகாணத்தின் தலைநகரான எல்-பாஷருக்கு வடக்கே உள்ள தோரா கிராமத்தில் நேற்று முன்தினம் பயங்கர வான்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கொடூர தாக்குதலில் 54 பேர் தீயில் கருகி பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை ராணுவம் நடத்தியதாக துணை ராணுவம் குற்றம் சாட்டிய நிலையில் ராணுவம் அதை மறுத்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.