கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) விதிகள் சிறுபான்மை கல்லூரிகளுக்கு பொருந்தாது என உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், 66 உதவிப் பேராசிரியர்களின் நியமனங்களுக்கு 4 வார காலத்தில் ஒப்புதல் அளிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள 4 சிறுபான்மை கல்லூரிகளில் பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிகளுக்கு புறம்பாக தேர்வுக்குழு அமைக்காமல், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, 66 உதவிப் பேராசிரியர்களின் நியமனங்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் ஒப்புதல் அளிக்க மறுத்தது. இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகள் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே யுஜிசியின் இந்த விதிகள் இந்த 4 கல்லூரிகளுக்கும் பொருந்தாது. ஒவ்வொரு விதிகளையும் தனித்தனியாக எதிர்த்து வழக்குத் தொடர வேண்டிய அவசியமில்லை. எனவே 66 உதவிப் பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளி்க்க மறுத்த சென்னை பல்கலைக்கழகத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த 66 உதவிப் பேராசிரியர்களின் நியமனங்களும் சட்டப்படியாக செல்லும் என்பதால் அந்த நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்து சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் 4 வாரங்களில் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.