அஜித் நடித்திருக்கும் `குட் பேட் அக்லி’ திரைப்படம் வருகிற வியாழக்கிழமை (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, சுனில், அர்ஜூன் தாஸ், பிரசன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
`விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து இப்படத்திலும் அஜித்துடன் த்ரிஷா நடித்திருக்கிறார்.

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள `குட் பேட் அக்லி’ படத்தில் ஆழமான எமோஷனும் இருக்கிறதாம். விகடனுக்கு அளித்தப் பேட்டியில் தனது ஆதர்ச நாயகன் அஜித்தை வைத்து இயக்கிய அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
நம்மிடையே பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “நான் சாருடைய மிகப் பெரிய ரசிகன். ஐடியா கிடைக்கும்போதெல்லாம் அதை எழுதி வச்சிட்டேன். முக்கியமாக, எனக்கு `குட் பேட் அக்லி’ பயணம் ரொம்பவே எமோஷனலானது.
அஜித் சார்கூட படப்பிடிப்பு தளத்துல இருந்ததை என்ஜாய் பண்ணினேன். ஆனால், அவருக்கு கதைச் சொல்லப்போறப்போ ரொம்ப பயம் எனக்குள்ள இருந்துச்சு.

நம்ம சொல்ற கதை சாருக்கு பிடிக்கணும்னு முதல்ல பயம் இருந்தது.
நான் சொன்ன கதைக்கு சார் ஓகே சொன்னதும் கதையை நல்ல படமாக எடுத்திடணும்னு பயம் இருந்தது.
சொல்லப்போனால், முழுக்க முழுக்க பயம் மட்டும்தான் இருந்தது. அதுபோல எனக்கு சந்தோஷமும் இருந்தது. ஆனால், அதைவிட அதிகமாக எனக்குள்ள பயம் மட்டும்தான் இருந்தது.
அதே சமயம் இந்த வாய்ப்பு எனக்கு பொறுப்பையும் கொடுத்துச்சு. என்னுடைய படப்பிடிப்பு தளம் எப்போதுமே கலகலப்பாக இருக்கும். அஜித் சாருமே ரொம்ப ஜாலியாக இருந்தாரு. இரவும் பகலும் உழைக்கணும். அதை சந்தோஷமாக பண்ணுவோம் அப்படிங்கிறதுதான் எங்களுடைய எண்ணம்.
நான் ரொம்பவே நிம்மதியாக வேலை பார்த்த திரைப்படம் `குட் பேட் அக்லி’தான். இந்தப் படத்தோட கதையைக் கேட்டதுமே `நல்லாயிருக்கு! இதை நம்ம படமாக உடனடியாகப் பண்ணுவோம்’னு சொன்னாரு.

கதை சொன்னதுக்குப் பிறகு அத்தனை வேலைகளும் பொறுமையாக நடக்கும்னுதான் நான் நினைச்சேன். ஆனால், அன்னைக்கு இரவுக்குள்ளவே படத்துல நடிக்கவிருக்கிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்னு எல்லா விஷயங்கள் பற்றியும் பிளான் பண்ணினோம்.
அப்போவே , மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு கால் பண்ணி பேசிட்டாரு. இந்த வேலைகளெல்லாம் முடிஞ்சு இரண்டே மாசத்துல ஷூட் போயிட்டோம்.” எனக் கூறினார்.