புதுச்சேரி: புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து பேருந்துகளையும் நிறுத்தி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று (ஏப்.9) தொடங்கினர்.
புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் (பிஆர்டிசி) சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 265 ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் அரசு இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று முதல் தொடர் வேலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை முதல் அனைத்து அரசு சாலைப்போக்குவரத்து கழக பேருந்துகளை பணிமனைகளில் நிறுத்தி தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அரசு தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யும் வரை தொடர் வேலை நிறுத்தம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.