முல்லான்பூர்,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. முல்லான்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா – பிரம்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் பிரியன்ஷ் ஆர்யா ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடியாக தொடங்கினார். ஆனால் சென்னை பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றினர். பஞ்சாப் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான பிரம்சிம்ரன் சிங் ரன் எதுவுமின்றியும், ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்களிலும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 4 ரன்களிலும், வதேரா 9 ரன்களிலும், மேக்ஸ்வெல் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
இருப்பினும் விக்கெட் விழுவதை நினைத்து கவலைப்படாத பிரியன்ஷ் ஆர்யா சென்னை பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். ஷசாங்க் சிங் அவருக்கு ஒரளவு ஒத்துழைப்பு கொடுத்தார். வெறும் 39 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 42 பந்துகளை எதிர்கொண்ட பிரியன்ஷ் 103 ரன்கள் (9 சிக்சர், 7 பவுண்டரி) குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இறுதி கட்டத்தில் ஷசாங்க் சிங் – மார்கோ ஜான்சன் இணை அதிரடியாக விளையாட பஞ்சாப் 200 ரன்களை கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. ஷசாங்க் சிங் 52 ரன்களுடனும், மார்கோ ஜான்சன் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் அஸ்வின் மற்றும் கலீல் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் ரச்சின் ரவீந்திரா மற்றும் கான்வே ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய இந்த ஜோடியில் ரவீந்திரா 36 (23) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் கெய்க்வாட் 1 ரன்னில் கேட்ச் ஆனார்.
அடுத்ததாக கான்வேயுடன், சிவம் துபே ஜோடி சேர்ந்தார். சீரான வேகத்தில் ரன் குவித்த இந்த ஜோடியால் அணியின் ரன்ரேட் அதிரடியாக உயர்ந்தது. இந்த ஜோடியில் அதிரடி காட்டிய கான்வே 37 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
மறுமுனையில் அதிரடி காட்டி வந்த சிவம் துபே 42 (27) ரன்களில் போல்ட் ஆகி சென்னை அணி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அடுத்ததாக கான்வேயுடன், தோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் கான்வே, (69 ரன்கள்) (retd hurt) அமர வைக்கப்பட்ட நிலையில், ஜடேஜா களமிறக்கினார்.
அடுத்து ஜோடி சேர்ந்த ஜடேஜா, தோனி இணை வேகமாக ரன்களை குவிக்க போராடினர். பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி சென்னை வீரர்களை கட்டுப்படுத்தினர். முன்னதாக போட்டியின்போது சென்னை வீரர்கள் கொடுத்த கேட்சுக்களை பிடிக்க பஞ்சாப் அணி வீரர்கள் தவறினர். ஆனால் அதனை பயன்படுத்தியும் சென்னை அணி வீரர்களால் வேகமாக ரன்கள் சேர்க்க முடியவில்லை.
கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டநிலையில், முதல் பந்திலே தோனி 27 (12) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
இறுதியில் விஜய் சங்கர் 2 ரன்னும், ஜடேஜா 9 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பின்னர் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணியின் சார்பில் பர்குசன் 2 விக்கெட்டுகளும், மேக்ஸ்வெல் மற்றும் யாஸ் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. இதனைதொடர்ந்து 6 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி , ஐ.பி.எல். தொடரில் தனது 3-வது வெற்றியை பதிவு செய்தது.