`லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் பரிச்சயமான நடிகர் ஆண்டனி இயற்கை எய்தியிருக்கிறார். `லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் நம்மை சிரிக்க வைத்தவர் சந்தானத்துடன் இணைந்து சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உடல்நிலை சரியில்லாமல் தாம்பரத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார் ஆண்டனி.

அவருடைய உடலில் தொற்று ஏற்பட்டு உடல் பாகங்களில் திரவம் உருவாகியிருந்தது. நுரையீரல் உட்பட உடலின் மற்ற பாகங்களில் கடந்தாண்டு நடந்த சிகிச்சையின் மூலம் வெளியேற்றினார்கள். சிகிச்சையைத் தொடர்ந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு இயற்கை எய்தியிருக்கிறார்.
சில பிரச்னைகளால் தனது மனைவியிடமிருந்து பிரிந்திருப்பதாக கடந்தாண்டு விகடனுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார் ஆண்டனி.
சந்தானத்துடன் இணைந்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த ஆண்டனி சினிமாவிலிருந்து விலகிப் பிறகு தேவையில்லாத நண்பர்களின் சேர்க்கையினால்தான் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்ததாகவும் கூறியிருந்தார்.
இது குறித்து அவர், “ முதல்ல எனக்கு சினிமாவுல நல்ல வாய்ப்புகள் வந்தது. சந்தானம்கூட தான் முதல்ல இருந்தேன். அதுக்குப் பிறகு தனியாக வாய்ப்பு தேடுறேன்னு வெளிய போனேன்.
அப்போகூட சந்தானம் அட்வைஸ் பண்ணுவார். நான் அதைக் கேட்காமல் இருந்தேன். பிசினஸ்லாம் பண்ணேன்.
அப்போ என் வாழ்க்கைல தேவையில்லாத நண்பர்கள்கூடலாம் சேர்ந்தேன். அவங்க பேசுற எல்லா விஷயத்தையும் நான் ஜாலியாக எடுத்துக்கிட்டேன்.
அப்போ என்னை பல பிசினஸ் பண்ண வச்சு என்கிட்ட இருந்த எல்லா பணத்தையும் திருடிக்கிட்டு போயிட்டாங்க.” எனக் கூறியிருந்தார். `ஏ1′ படத்தின் இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள `மெடிக்கல் மிராக்கிள்’ படத்தில் நடித்திருக்கிறார் ஆண்டனி.