அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

விர்ஜீனியா,

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்த விர்ஜீனியா மாகாணத்தில் ஸ்பாட்சில்வேனியா கவுன்டி பகுதியில் டவுன்ஹவுஸ் வளாகத்தில் மர்ம நபர்கள் சிலர் ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில், 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த பகுதி வாஷிங்டன் நகரில் இருந்து தென்மேற்கே 105 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியை தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை. உடனடியாக யாரும் கைது செய்யப்படவில்லை. தாக்குதலை நடத்தியதற்கான காரணமும் தெரிய வரவில்லை. எனினும், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 3 பேரும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுடைய நிலைமை என்னவானது மற்றும் பிற தகவல்கள் உள்பட எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.