சென்னை: பிளஸ் டூ மாணவன் விபரீத முடிவு; உருவக் கேலி காரணமா? – சோகத்தில் பெற்றோர்

சென்னை சேத்துப்பட்டு டாக்டர் குருசாமி ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கோபிநாத். இவர் கார் கம்பெனியில் அதிகாரியாக வேலைப்பார்த்து வருகிறார். இவரின் மனைவி நித்யா. இவர் மின்வாரியத்தில் அதிகாரியாக உள்ளார். இந்தத் தம்பதிக்கு கிஷோர் (17) என்ற மகனும் உள்ளனர்.

தற்கொலை

கிஷோர் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள பிரபலமான தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இந்தநிலையில் அவர், 4-வது மாடியிலிருந்து குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த கிஷோரின் பெற்றோர், மகனின் மரணத்துக்கு பள்ளியில் நடந்த சம்பவமே காரணம் என குற்றம் சாட்டியிருக்கிறார்கள். மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீஸார் கூறுகையில், மாணவன் கிஷோர் படித்த பள்ளியில் அவனை சில மாணவர்கள், லூசு, கருப்பு நிறம் என்று கூறி கிண்டல் செய்ததாக தகவல் உள்ளது. அதனால் மாணவன் கிஷோர் இந்தச் சம்பவத்தை தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். அதனால் கடந்த 9.4.2025 இதுதொடர்பாக மாணவன் கிஷோர், கிண்டல் செய்யும் மாணவர்கள் குறித்த விவரங்களை புகாராக எழுதி வைத்திருக்கிறார். ஆனால் அந்தப் புகாரை பள்ளியில் மாணவன் கிஷோர் கொடுக்கவில்லை.

மாணவன் தற்கொலை

இதையடுத்து தன்னுடைய மகன் கிஷோரை அழைத்துக் கொண்டு அவரின் அம்மா நித்யா, அன்றைய தினம் மாலையில் பள்ளிக்குச் சென்று முதல்வரிடம் புகாரளித்திருக்கிறார். அப்போது நாளை (10.4.2025) விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக பள்ளி முதல்வர் மாணவனின் அம்மா நித்யாவிடம் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு மகனோடு நித்யா வீட்டுக்கு வந்திருக்கிறார்.

ஆனால், மாணவன் கிஷோர் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் அவனை அருகிலிருந்து நித்யா கவனித்திருக்கிறார். மாலை 6 மணியளவில் சைக்கிள் ஓட்டிவிட்டு வருகிறேன் என்று கூறிய மாணவன் கிஷோர் வீட்டிலிருந்து வெளியில் சென்றிருக்கிறார். அப்போதுதான் 4-வது மாடிக்குச் சென்று கீழே குதித்து தற்கொலை செய்திருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளியில் விசாரணை நடத்த உள்ளோம். விசாரணைக்குப்பிறகுதான் மாணவன் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார் என்ற தகவல் தெரியவரும்” என்றனர்.

மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரின் பெற்றோர் மற்றும் அந்தப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தற்கொலை தடுப்பு மையம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.