கே.எல்.ராகுல் அபாரம்: பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூருவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி – பில் சால்ட் ஆகியோர் களமிறங்கினர். இதி பில் சால்ட் ஆரம்பம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கினார். ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் 3-வது ஓவரில் மட்டும் எக்ஸ்டிரா உட்பட 30 ரன்கள் வந்தது. இதனால் பெங்களூரு அணி 3 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்தது. இதனால் பெங்களூரு அணி இமாலய ரன் குவிக்கும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் பில் சால்ட் (37 ரன்கள்) ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஒடி ரன் அவுட் ஆனார். அத்துடன் ஆட்டத்தின் போக்கு மாறியது.

இதன்படி பெங்களூரு அணி வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது. படிக்கல் ஒரு ரன்னிலும், விராட் கோலி 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்களும் பெரிய அளவில் ரன் அடிக்காததால் பெங்களூரு அணி தடுமாறியது. டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி பெங்களூருவுக்கு நெருக்கடி கொடுத்தனர். லிவிங்ஸ்டன் 4 ரன்களிலும், ஜிதேஷ் சர்மா 3 ரன்களிலும், படிதார் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் இறுதி கட்டத்தில் டிம் டேவிட் (37 ரன்கள்) அதிரடியாக விளையாடி பெங்களூரு அணி நல்ல நிலையை எட்ட உதவினார். இவரின் அதிரடியால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் அடித்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் மற்றும் விப்ராஜ் நிகாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சார்பில் டூ பிளஸ்சிஸ் மற்றும் ஜாக் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கமே டெல்லி அணிக்கு சோதனையாக அமைந்தது. டூ பிளஸ்சிஸ் 2 ரன்னில் வெளியேற, அவரைத்தொடர்ந்து ஜாக் 7 ரன்னும், அடுத்து களமிறங்கிய அபிஷேக் போரல் 7 ரன்னும், அக்சர் பட்டேல் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக கே.எல்.ராகுலுடன், ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் கே.எல்.ராகுல் 37 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். பின்னர் இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்க்கத் தொடங்கியது. இதனால் டெல்லி அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. விக்கெட்டுகளை வீழ்த்த பெங்களூரு அணி வீரர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

முடிவில் கே.எல்.ராகுல் 93 (53) ரன்களும், ஸ்டப்ஸ் 38 (23) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் டெல்லி அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளும், யாஸ் தயாள் மற்றும் சுயாஸ் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது. இதன்படி டெல்லி அணி 8 புள்ளிகளுடன் 4-வது தொடர் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.