பாட்னா: பிஹாரில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. அப்போது சீவான், பெகுசாரை, பாகல்பூர், ஜெகனாபாத், முஷாபர்பூர், சகர்ஷா, மதேபூரா, சாப்ரா உள்ளிட்ட பகுதிகளில் மின்னல் தாக்கி 28 பேர் உயிரிழந்தனர்.
பிஹாரின் நாளந்தா பகுதி, இஸ்லாம்பூரில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். விஷ்ணுபூர், நூர்சராய், செயின்புரா உள்ளிட்ட பகுதிகளில் சுவர் இடிந்து, மரங்கள் முறிந்து விழுந்து மேலும் 14 பேர் உயிரிழந்தனர். மின்னல் மற்றும் மழை பாதிப்பால் பிஹாரில் நேற்று ஒரே நாளில் 46 பேர் உயிரிழந்தனர். மழை பாதிப்புகளால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
உ.பி.யில் 6 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் லக்னோ, வாராணசி, கான்பூர், கோரக்பூர் உட்பட 25 நகரங்களில் நேற்று கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகி உள்ளன. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பிகள் அறுந்தன.
இதனால் நொய்டா, கான்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளது. உத்தர பிரதேசம், பிஹாரில் அடுத்த சில நாட்களுக்கு பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.