ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம் ரெட்டிபல்லி கிராமத்தை சேர்ந்தவர் ராமய்யா (87). விவசாயியான ராமய்யா 50 வருடங்களுக்கும் மேலாக கம்மம் உட்பட அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களில் மரக்கன்றுகளை நடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனால் இவரை சிலர் கேலியும் செய்ததுண்டு. ஆனால், அவர் அதனை பொருட்படுத்துவதில்லை. இவர் தன் சட்டை மீதும், தலையிலும் “இயற்கையை நாம் காப்பாற்றினால் இயற்கை நம்மை காப்பாற்றும்” எனும் வாசகத்தை ஒரு அட்டையில் ஒட்டி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இவரது சேவையை அறிந்த மத்திய அரசு, ராமய்யாவுக்கு கடந்த 2017-ல் பத்ம விருது வழங்கி பாராட்டியது.
இவருக்கு ‘வன ஜீவி’ என மக்கள் பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில், ராமய்யா 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே ஒரு மரக்கன்றை நட்டு விட்டு இரவு அதன் அருகிலேயே படுத்து உறங்கி விட்டார். நேற்று முன்தினம் காலை அவரை எழுப்பிய அவரது வீட்டார், அவர் அசையாமல் இருக்கவே, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவரிடம் காண்பித்தனர்.
அப்போது, ஏற்கெனவே ராமய்யா மாரடைப்பால் இறந்துவிட்டார் என்பதை மருத்துவர்உறுதிப்படுத்தினார். இதை யடுத்து ராமய்யா மறைவுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.