திருப்பூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். விடுமுறை காரணமாக ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.
உறவினரின் சொந்தமான காரை ஓட்டிப் பழக வேண்டும் என்று சிறுவனுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு காரின் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். அதன்பின்னர் காரை ஓட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார் அந்தச் சிறுவன்.
பவானியில் இருந்து மேட்டூர் செல்லும் சாலையில் ஜல்லிக்கல் மேடு என்ற பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அருகே இருந்த குடிசைக்குள் புகுந்தது.
அப்போது, குடிசைக்குள் தூங்கிக் கொண்டிருந்த கற்பகவல்லி (35) என்பவர் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கற்பகவல்லி உடல் நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் வீட்டின் மற்றொரு பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த கற்பகவல்லியின் கணவர் கருப்பணன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். விபத்து நடந்தபோது காரில் ஏர்பேக் வெடித்ததால் சிறுவனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த பவானி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று கற்பகவல்லியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த சிறுவன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து சிறுவனின் தந்தையான விஜயானந்த் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் ஓட்டிய கார் குடிசைக்குள் புகுந்து, தூங்கிக்கொண்டிருந்த பெண் பலியானது பவானி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
