ஒவ்வொரு ஆண்டும் சில குறிப்பிட்ட நாட்களில் தனது ரசிகர்களை சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகர் சூர்யா. தனது மன்றத்தினரின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணித்து அவர்களை வழிநடத்தி வரும் அவர், இம்முறை தமிழகம் முழுவதும் இருந்து வந்த 4 ஆயிரம் ரசிகர்களை சந்தித்துள்ளார்.
கடந்த 13ம் தேதி மற்றும் 14 ம் தேதி இரு நாட்கள் போரூரில் உள்ள சக்தி பேலஸில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. இதில் 70 மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் பொறுப்பில் உள்ளோர்கள் பங்கேற்றுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் சூர்யா தன் ரசிகர் மன்றத்தினரை சீரமைத்தார். தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் உள்ள மன்றங்களை எல்லாம் ஒருங்கிணைத்து, அதை டிஜிட்டல் படுத்தியும் உள்ளார். அதன் அடிப்படையும் இந்த சந்திப்பில் 70 மாவட்ட பொறுப்பாளர்கள் இரண்டு நாட்கள் வருகை தந்திருந்து சூர்யாவை சந்தித்து பேசியுள்ளனர்.
கடந்த ஆண்டு இதே போல் நடந்த ஒரு சந்திப்பில் சூர்யா, ‘இனி வருடத்திற்கு இரண்டு படங்கள் கண்டிப்பாக தருவேன்’ என்று உறுதி மொழி கொடுத்திருந்தார். அதன்படி இந்தாண்டு ‘ரெட்ரோ” திரைக்கு வருகிறது. அதனை அடுத்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’ படமும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இம்முறை நடைபெற்ற கூட்டத்தில் அப்படி எதுவும் பேசவில்லை. ரசிகர்களிடம் அன்பாக நலம் விசாரித்ததுடன், மன்றத்தின் குறை நிறைகளை மற்றும் செயல்பாடுகளையும் கேட்டறிந்திருக்கிறார் என்கிறார்கள். இந்த நிகழ்வில் சூர்யாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர் ரசிகர்கள். ஒவ்வொருவருடனும் தனித்தனியாக பொறுமைகாத்து புன்னகையுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்
இதற்கிடையே சூர்யாவின் ‘ரெட்ரோ’ வில் இருந்து ‘கண்ணாடிப்பூவே’, ‘கனிமா’ பாடலை அடுத்து ‘தி ஒன்’ பாடல் வெளியாகியிருக்கிறது. படத்தின் ரிலீஸ் மே 1 என அறிவித்துள்ளதால் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இந்த வாரத்தில் நடக்கிறது. நேரு ஸ்டேடியத்தில் வருகிற 18 தேதி நடைபெறும் நிகழ்ச்சிக்கு படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்பதுடன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை நிகழ்ச்சி உள்பட பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது என்கிறார்கள்.!