சென்னை: இந்து சமய அறநிலையத்துறை பதிப்பகப் பிரிவால் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத்துறையானது சமய நெறிகளை பரப்பிடும் வகையில் அரிய ஆன்மிக நூல்களை மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யும் பணிகளை மேற் கொண்டு வருகிறது. மேலும், அந்த நூல்கள் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் தகோயில்களில் புத்தக விற்பனை நிலையங்களையும் அமைத்து செயலாற்றி வருகிறது.
அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பதிப்பகப் பிரிவு தொடங்கப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினால் முதற்கட்டமாக தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டடக் கலை வரலாறு, அவ்வையார் வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட அரிய 108 ஆன்மிக நூல்கள் கடந்த 2023 ஜனவரி 19ம் தேதியும், இரண்டாம் கட்டமாக தலவரலாறு, தலப்புராணங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 108 ஆன்மிக நூல்கள் கடந்தாண்டு பிப் 27ம் தேதியும் வெளியிடப்பட்டு, விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, 2024-25ம் நிதியாண்டுக்கான துறையின் மானிய கோரிக்கையில், ‘‘பதிப்பகப்பிரிவின் மூலம் சமயம் சார்ந்த தொன்மையான மற்றும் அரிய 300 ஆன்மிக நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்படும்” என அறிவிக்கப்பட்டது. இதை நிறைவேற்றும் வகையில், பதிப்பகப் பிரிவின் மூலம் மூன்றாம் கட்டமாக, திருப்பேரூர் புராணம், பாவநாசத் தலபுராணம் போன்ற தலபுராண நூல்கள், சிவபுராணம், கந்தபுராணம் போன்ற புராணக்கதை நூல்கள், வழிபாட்டு பாடல்கள், மகாபாரதம், கம்பராமாயணம் போன்ற இதிகாச நூல்கள், காரைக்கால் அம்மையார். நம்மாழ்வார் போன்ற அடியார் புலவர் வரலாற்று நூல்கள், நுண்கலைகள், ஓவியச் செந்நூல் போன்ற கோயில் கலை வரலாற்று நூல்கள், சைவ, வைணவ இலக்கியங்கள், வேலும் வில்லும், வள்ளி மணம் போன்ற ஆன்மிக ஆய்வு நூல்கள், Temples gifted with Devaram, How soul becomes light போன்ற ஆங்கில நூல்கள் என அரிய 300 ஆன்மிக நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டன. இந்த நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச்செயலகத்தில் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச்செயலர் நா.முருகானந்தம், துறையின் செயலர் க.மணிவாசன், அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.