ராய்ப்பூர்,
சத்தீஷ்கார், மராட்டியம், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதனால், நக்சலைட்டுகள் பலரும் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர். அதேவேளை, நக்சலைட்டுகள், பாதுகாப்புப்படையினர் இடையே அவ்வபோது துப்பாக்கி சண்டையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சத்தீஷ்காரின் கொண்டகான்-நாராயண்பூர் மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் இன்று காலை அங்கு சென்ற பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப்படையினர் பதிலடி கொடுத்தனர்.இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்கவுன்டர் நடந்த பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.