இயக்குநர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஜனனி. இத்திரைப்படத்தை தொடர்ந்து அசோக் செல்வனுடன் அவர் நடித்திருந்த ‘தெகிடி’ திரைப்படமும் மக்களிடம் பெரிதளவில் வரவேற்பை பெற்றது. நடிகை ஜனனிக்கும் சாய் ரோஷன் ஷ்யாம் என்பவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு அறிவித்திருக்கிறார் ஜனனி.

சாய் ரோஷன் ஷ்யாம் ஒரு விமானி. அது தொடர்பான பதிவுகளையும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் போட்டிருக்கிறார். சினிமாவை தாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஜனனி பங்கேற்றிருக்கிறார் . அதிலும் மூன்றாவது ரன்னர் அப்பாக வந்திருந்தார்.
மீடியா கனவுடன் முதலில் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்தார் ஜனனி. மாடலிங் பக்கம் இருந்த சமயத்திலேயே ‘திரு திரு துரு துரு’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனை தாண்டி கெளதம் மேனனின் ‘விண்ணை தாண்டி வருவாயா’ திரைப்படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

தமிழ் திரைப்படங்களை தாண்டி சில மலையாள திரைப்படங்களிலும் ஜனனி நடித்திருக்கிறார். ஜனனிக்கும் சாய் ரோஷன் ஷ்யாமுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கும் நிலையில், தமிழ் திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.