மும்பை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் வில் ஜாக்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்து 163 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வில் ஜாக்ஸ் 36 ரன்கள் அடித்தார். ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், இஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பஞ்சாபுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா செஞ்சுரி அடித்ததும் பேட்டை மைதானத்தில் வைத்து விட்டு தனது பையில் வைத்து இருந்த காகிதத்தை எடுத்து ரசிகர்களை நோக்கி காட்டினார். அதில் ஐதராபாத் அணியின் ரசிகர்களுக்கு சதத்தை அர்ப்பணிப்பதாக எழுதப்பட்டு இருந்தது.
நேற்றைய ஆட்டத்தில் அப்படி எதுவும் பேப்பர் எடுத்து வந்துள்ளாரா? என மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் அவரது பையை சோதனை செய்தார். இந்த சுவாரசிய சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.