கோவையில் நயினார் நாகேந்திரனுக்கு வரவேற்பு; அண்ணாமலை மிஸ்ஸிங் டு மேடையில் வெளியான அறிவிப்பு!

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவை மண்டல பாஜக சார்பில் வரவேற்பு கூட்டம் நடத்தப்பட்டது. நயினார் வருவதற்கு முன்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ரஜினிகாந்த் வேடம்

ரஜினிகாந்த் வேடம்

இதில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் எம்ஜிஆர் வேடமணிந்த கலைஞர்கள் சினிமா பாடல்களுக்கு நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினர். குறிப்பாக ரஜினி வேடம் அணிந்து நடனமாடிய கலைஞர், பாஜக சின்னம் பொறித்த காவித்துண்டுடன் பாஜகவினரை உற்சாகப்படுத்தினார்.

தொடர்ந்து எம்ஜிஆர் வேடம் போட்ட ஒரு கலைஞர், காவித்துண்டு அணிந்த பா.ஜகவை சேர்ந்த ஒருவரை அருகில் அழைத்து இருக்கையில் அமர வைப்பது போன்ற காட்சிகளும் நடித்து காட்டப்பட்டது. “ஏய்.. இங்க பாரு நயினாரை எம்ஜிஆர் அழைச்சுட்டு போறார்.” என சில பாஜக நிர்வாகிகள் பேசியபோதுதான் நயினார் கெட்டப்பில் ஒருவர் இருந்ததே தெரிய வந்தது.

எம்ஜிஆர், நயினார்

இந்த நிகழ்ச்சிக்காக நயினார் நாகேந்திரனை வரவேற்று வழநெடுக பேனர்கள் வைக்கப்பட்டன. நயினாரை சாரட் வண்டி வைத்து எல்லாம் வரவேற்று அதளப்படுத்தியிருந்தனர்.

அண்ணாமலை மிஸ்ஸிங்

மத்திய அமைச்சர் எல். முருகன், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நடந்த மண்டபத்தின் அருகிலேயே தான் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. ஆனால் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை குறித்து அனைவருமே பாராட்டி பேசினார்கள்.

நயினார், முருகன், வானதி

அவர் பெயர் குறிப்பிடும்போது எல்லாம் தொண்டர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். இதை கவனித்த நயினார் நாகேந்திரன், “ஒவ்வொருவருக்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கு. ஆனால், ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் அண்ணாமலைக்கு இருக்கின்றது.” என்று கூறினார்.

எல்.முருகன் பேசும்போது, “ஜெய் ஶ்ரீராம்.” என்று பலமுறை குறிப்பிட்டார். அதற்கு கூட்டத்தில் இருந்து பெரியளவுக்கு வரவேற்பு வரவில்லை. அப்போது முருகன், “இது இங்கயே கேட்காது. வெளியே ஸ்டாலினுக்கு எப்படி கேட்கும்.” என்று கூறினார்.

பாஜக

நயினார் அதிமுகவில் இருந்து வந்ததை போல, கோவை முன்னாள் எம்எல்ஏ சேலஞ்சர் துரையும் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்துள்ளார். இருவரும் ஒரே காலத்தில் எம்எல்ஏவாக இருந்தவர்கள் என்பதால், நயினார் நாகேந்திரன் சேலஞ்சர் துரையை, ‘மச்சான்’ என்று குறிப்பிட்டார்.

சுமார் 4 மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் வந்திருந்ததால் முருகன், வானதி உள்ளிட்டோர், “நீங்க தொண்டர்களை சந்திச்சுட்டு வாங்க நாங்க கிளம்புறோம்.” என்று நயினாரிடம் சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டனர். செல்லும்போது மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தமிடம், “கூட்டத்தை கன்ட்ரோல் செய்து அனுப்புங்கள்.” என்று சொல்லிவிட்டு தான் சென்றனர்.

நயினார் நாகேந்திரன் வரவேற்பு

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மேடை தொண்டர்களின் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த மேடையில் இருந்து கொடுத்த எந்த அறிவிப்புகளையும் யாரும் காது கொடுத்து கூட கேட்கவில்லை.

“அண்ணா.. ஒரு நிமிஷம்.. இங்க பாருங்க மேடைல இத்தனை பேர் வந்தா தள்ளு முள்ளு ஆகும். லைன்ல வாங்க. அஞ்சே நிமிஷம் பொறுங்க.” என்று தொடர்ந்து அறிவிப்புகள் வந்து கொண்டே இருந்தது. பெண் தொண்டர்களும் மேடை ஏற தயாராக இருந்தார்கள். அப்போது, “தாய் குலமே அஞ்சே நிமிஷம் வெயிட் பண்ணுங்க.

கூட்டம்

எதுக்கு இந்த தள்ளு முள்ளு. நீங்க போட்ருக்கற செயின், மோதிரம், வளையல் எல்லாம் முக்கியம். அதையும் பார்த்துக்கோங்க.” என்று எச்சரிக்கை விடுத்தார். “சொந்தக் கட்சி கூட்டத்திலேயே எச்சரிக்கையா.” என்று பலர் அதிர்ச்சியுடன் வெளியேறினார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.