பாஜக – அதிமுக கூட்டணி முதல் இந்தி திணிப்பு எதிர்ப்பு வரை: முதல்வர் ஸ்டாலின் பதில்கள்

சென்னை: “அதிமுக – பாஜக கூட்டணி திமுக அணியால் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான்! ஒரு முறை அல்ல; இரு முறை! 2024 நாடாளுமன்றத் தேர்தலிலேயே இரு கட்சிகளும் பிரிந்தது போலத் தெரிந்தாலும் கள்ளக்கூட்டணியாகத்தான் இருந்தார்கள் என்று குற்றம் சாட்டினேன். அதை வெளிப்படுத்தும் வகையில்தான் அண்மைக்கால நிகழ்வுகள் உள்ளன.” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பாஜக – அதிமுக கூட்டணி, திமுகவின் தொகுதி மறுவரையறை எதிர்ப்பு, இந்தித் திணிப்புகள் கொள்கைகள், தமிழக சட்டம் – ஒழுங்கு நிலவரம் எனப் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் இடம்பெற்ற சில கேள்விகளின் தொகுப்பு வருமாறு: * தொகுதி மறுவரையறையை ஏன் எதிர்க்கிறீர்கள்?

சிறு திருத்தம். தொகுதி மறுசீரமைப்பைத் திமுக எதிர்க்கவில்லை. எதிர்வரவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பைத்தான் உறுதியாக எதிர்க்கிறோம்.

மக்கள்தொகைக் கட்டுப்பாடு என்பது நாட்டின் பொருளாதாரம் – மக்களின் நல்வாழ்வு – வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு 50 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. நாட்டு நலனில் அக்கறை உள்ள மாநிலமாகத் தமிழ்நாடும் தென்மாநிலங்களும் இருந்த காரணத்தால் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம்.

மக்கள்தொகைப் பெருக்கம் என்ற நெருக்கடியை, மனிதவள ஆற்றல் என்ற சாதகமான அம்சமாக மாற்றியதில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது. நாட்டின் நலனுக்காக ஒன்றிய அரசு முன்வைத்த ஒரு திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றிய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்குத் தண்டனையாக, அதே மக்கள்தொகையை அடிப்படையாக வைத்து நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைப்பது என்ன நியாயம்? இந்த அளவுகோலைத்தான் எதிர்க்கிறாம்.

* 1971ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என நீங்கள் கோருவது தமிழ்நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளை பற்றி பேசாமல் மக்களை திசைதிருப்பவே என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு தங்களின் பதில் என்ன?

திமுகவின் மாநில உரிமைக் குரலுக்கு நியாயமான பதில் சொல்ல முடியாதவர்கள்தான் திசை திருப்புகிறார்கள். ஒன்றிய அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள், அறிக்கைகளின்படியே தமிழ்நாடு பல்வேறு இலக்குகளில் முன்னேறியிருக்கிறது. திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் போய்ச் சேர்ந்திருக்கிறது. மக்களின் ஆதரவு திமுகவுக்கு வலுவாக உள்ளது. எனவே, திசை திருப்ப வேண்டிய சூழலோ அவசியமோ எங்களுக்கு கிடையாது.

1971 மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது ஏற்கெனவே இந்திய அளவில் விவாதிக்கப்பட்டதுதான். அது மேலும் 25 ஆண்டுகளுக்குத் தொடரவேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்.

* மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையில் இன்னொரு சர்ச்சைக்குரிய விசயமாக இருந்து வருகிறது. இந்தி திணிப்பு பற்றிய உங்களது பயம் அதீதமா அல்லது உண்மையா?

இந்திமொழி ஆதிக்கம் என்பது எத்தகைய மோசமான விளைவுகளை உருவாக்கும் என்பதற்கும், இந்தித் திணிப்பினால் வடமாநிலங்களிலேயே பலர் அவரவர் தாய்மொழிகளையும், வட்டார மொழிகளையும் கடந்த ஐம்பதாண்டுகளில் இழந்திருப்பதையும் ஆதாரத்துடன் முன்வைத்திருக்கிறோம்.

தமிழ்நாடு ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன்பே இதுகுறித்த விழிப்புணர்வுடனும், தொலைநோக்குப் பார்வையுடனும் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நின்றது. அதில் திராவிட இயக்கத்தின் பங்கு முக்கியமானது. திமுக ஆதரவு மாணவர்கள் – இளைஞர்கள் – தொண்டர்கள் பலர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். திமுக தலைவர்கள் கொடுமையான சிறைத் தண்டனையை எதிர்கொண்டனர். பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினார்.

அதுதான் இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் மொழி – பண்பாட்டின் பாதுகாப்பிற்கும் அடித்தளமாக உள்ளது. மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு உறுதியுடன் எதிர்ப்பதற்கு காரணம், அது தமிழ்நாட்டின் வளர்ச்சியை சிதைக்கும் நோக்கிலான பா.ஜ.க. அரசின் மறைமுகத் திட்டம் என்பதால்தான்.

* நீங்கள் பிரிவினைவாதம் மற்றும் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கிறீர்கள் என பாஜக உங்கள் மீது வைக்கும் குற்றசாட்டுகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அரசியல்சட்டம் தந்த கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்க குரல் கொடுப்பதும், அரசியல் சட்ட அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை வளர்க்கப் பாடுபடுவதும் எப்படி பிரிவினை அரசியலாக இருக்க முடியும்? வெறுப்பையே அரசியல் கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க., உருவாக்கிய மதக் கலவரங்கள், இனக்கலவரங்கள் இன்னமும் இந்திய வரலாற்றின் கறை படிந்த பக்கங்களாக உள்ளன. மணிப்பூர் மாநிலம் இப்போதும் கலவரத்தின் பச்சை ரத்தம் காயாத பூமியாக உள்ளது. நாடு போர்க்களத்தில் நின்ற ஒவ்வொரு நேரத்திலும் துணை நின்று- அதிக அளவில் நிதி தந்து இந்த நாட்டிற்கு உற்ற துணையாக இருந்த தமிழ்நாட்டைப் பார்த்து- திமுகவைப் பார்த்து பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டுவது, மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது போலத்தான் இருக்கிறது.

* பாஜக – அதிமுக கூட்டணியை வலிமையான எதிரியாக பார்க்கிறீர்களா? அவர்கள் ஒன்று சேர்ந்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

இது திமுக அணியால் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான்! ஒரு முறை அல்ல; இரு முறை! 2024 நாடாளுமன்றத் தேர்தலிலேயே இரு கட்சிகளும் பிரிந்தது போலத் தெரிந்தாலும் கள்ளக்கூட்டணியாகத்தான் இருந்தார்கள் என்று குற்றம் சாட்டினேன். அதை வெளிப்படுத்தும் வகையில்தான் அண்மைக்கால நிகழ்வுகள் இருந்தன. தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்யும் பா.ஜ.க.வையும், அதனுடன் கூட்டணி சேர்ந்து துரோகம் இழைக்கும் அதிமுகவையும், மூன்றாவது முறையும் தமிழ்நாட்டு மக்கள் தோற்கடிப்பார்கள்.

* உங்கள் அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் தற்போது சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக எதிர்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

முத்திரைத் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி, நல்லாட்சிக்கு இலக்கணமாக திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது. நலத் திட்டங்களின் பயனாளிகளாக இருக்கும் மக்கள் போற்றுகிறார்கள்.

பத்தாண்டு கால அதிமுக ஆட்சி காலத்தில் சீரழிந்து கிடந்த நிர்வாகம் இப்போது சீரடைந்து இருக்கிறது. சட்டம்- ஒழுங்கு, பொது அமைதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு காவல்துறை தலைநிமிர்ந்து செயலாற்றுகிறது. தொழில் முதலீடுகள், புதிய வேலை வாய்ப்புகள், மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி என தமிழ்நாடு முதன்மை மாநிலமாக – முன்னனி மாநிலமாக நிற்கிறது.

இவற்றை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள், இந்த அரசின் மீது எவ்வித குற்றச்சாட்டையும் கூற முடியாத எதிர்க்கட்சிகள், கற்பனை குற்றச்சாட்டுகளைக் கூறி விதண்டவாத அரசியலும் – வீண் பிரச்சாரமும் செய்கிறார்கள். உண்மை நிலை என்ன என்பது ஒவ்வொரு திட்டத்திலும் பயன் பெறும் மக்களுக்கும், ஒவ்வொரு பகுதிக்கும் பயணித்துவிட்டு பத்திரமாகத் திரும்புகிறவர்களுக்கும் தெரியும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.