சென்னை: திமுக கூட்டணி கட்சிகளுக்குள்ளான உறவு உறுதியாக உள்ளது. கூட்டணி நாளுக்கு நாள் வலிமை பெறுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பேபியுடனான சந்திப்புக்குப் பின்னர் அவர் இதனை எக்ஸ் தளத்தில் பதிவாகப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் M.A.பேபி இன்று என்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து, ஆளுநர்களின் அதிகார எல்லையை வெட்டவெளிச்சமாக்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, நாம் அமைத்துள்ள மாநில சுயாட்சிக்கான உயர்நிலைக் குழு ஆகிய இரண்டு முக்கியமான முன்னேற்றங்களுக்காகத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இவை தனித்த வெற்றிகள் அல்ல. அண்மையில் மதுரையில் நடந்தேறிய CPIM கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டில், அரசியலமைப்புச் சட்டமே முதன்மை என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை நியமனப் பதவிகளில் இருப்போர் தடுக்க முடியாது எனவும் நாம் முழங்கி முன்னெடுத்த கூட்டாட்சிக் கருத்தியல்களின் வெளிப்பாடு ஆகும். எங்கள் உறவு உறுதியாக உள்ளது! கூட்டணி நாளுக்கு நாள் வலிமை பெறுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.