ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா விரைகிறார். புதன்கிழமை அதிகாலை அவர் இந்தியா வந்தடைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானின் அழைப்பின் பெயரில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
இந்த சூழலில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) துப்பாக்கி சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து பிரதமர் மோடி தனது சவுதி பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட உள்ளதாகவும் புதன்கிழமை அதிகாலை அவர் இந்தியா வந்தடைவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘‘இந்த தாக்குதலை நடத்தியவர்கள் தப்ப முடியாது. அவர்களின் தீய நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது. தீவிரவாதத்துக்கு எதிரான நமது போராட்டம் உறுதியானது. அது மேலும் வலுவடையும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்தது என்ன? – ஜம்மு காஷ்மீரின் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் சிலரை ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் பெயர் மற்றும் மதத்தை பயங்கரவாதிகள் கேட்டு துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், சுற்றுலாப் பயணிகள் இங்கும், அங்கும் ஓடினர். திறந்தவெளி என்பதால், சுற்றுலாப் பயணிகளால் துப்பாக்கி சூடு தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை.
இந்தத் தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர். இது பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் போல் தெரிகிறது. பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்திய இடத்துக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை உள்ளூர் மக்கள் குதிரைகள் உதவியுடன் மீட்டு அழைத்துவந்தனர். அதன்பின் அங்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு காயம் அடைந்தோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னதாக, காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் 2019-ல் நடத்திய தாக்குதலில் 47 வீரர்கள் உயிரிழந்தனர். அதன்பின் பயங்கரவாதிகள் நடத்திய மிகப் பெரிய தாக்குதல் இது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.