சென்னை: “ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து, பல விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்த காட்டுமிராண்டித்தனமான தீவிரவாதத் தாக்குதல் மனசாட்சியையே உலுக்குகிறது.” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், “ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து, பல விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்த காட்டுமிராண்டித்தனமான தீவிரவாதத் தாக்குதல் மனசாட்சியையே உலுக்குகிறது.
இது கடும் கண்டனத்துக்குரியது. சொந்தங்களை இழந்து தவிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
இத்தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோரும் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். உடனடியாக, புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையரைத் தொடர்பு கொண்டு, ஜம்மு காஷ்மீர் மாநில அதிகாரிகளுடன் பேசி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைத்துத் தர அறிவுறுத்தியிருக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தெற்கு காஷ்மீரில் உள்ள பகல்காமில் இன்று (ஏப்.22) தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 25 பேர் உயிரிழந்தனர். இவர்களில் இருவர் வெளிநாட்டவர் என்று தெரிகிறது. கர்நாடகா, ஒடிசாவை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இதில் அடங்குவர்.
அனந்த்நாக் காவல் துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளின் உதவிக்காக அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை தொடர்பு கொள்ள 9596777669, 01932225870 மற்றும் வாட்ஸ்அப் எண் 9419051940 அணுகலாம்.