ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், உயிரிழந்தவர்களின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். சுற்றுலா சென்றவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு முன்பாக அவர்களின் மதம் குறித்து கேட்டு பின்னர் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குஜராத், கர்நாடகா உள்பட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை அனைவரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த தாக்குதலை அடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றே ஸ்ரீநகர் விரைந்தார். ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா, சிஆர்பிஎஃப் டிஜி, ஜம்மு காஷ்மீர் டிஜி, ராணுவ அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
உயிரிழந்த 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு ஸ்ரீநகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. உயிரிழந்தவர்களுக்கு அமித் ஷா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, அங்கு கூடி இருந்த உயிரிழந்தவர்களின் உறவினர்களை அமித் ஷா சந்தித்தார். அவர்கள் கதறி அழுதபடி அமித் ஷாவிடம் முறையிட்டனர். அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த அமித் ஷா, இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் யாரும் தப்பிக்க முடியாது என்றும் கூறினார்.
துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் தாரிக் ஹமீத் உள்ளிட்டோரும் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.