ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. இதில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக சினார் படைப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்க 2–3 அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் முயன்றதை அறிந்த துருப்புக்கள், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு ஊடுருவல்காரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதன் காரணமாக கடுமையான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து ராணுவம் அங்கு உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், பாதுகாப்புப் படையினரால் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்திய கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து இந்த மோதல் நடந்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். பரபரப்பாக இருந்த சுற்றுலா மையங்களில் உள்ள தெருக்கள் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன. பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் சோதனைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கும் நோக்கில், அரசியல் கட்சிகள், வர்த்தகர்கள் சங்கங்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் விடுத்த அழைப்புகளைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று (புதன்கிழமை) முழுமையான கடையடைப்பு அனுசரிக்கப்பட்டுள்ளது. மேலும், பாரமுல்லா, ஸ்ரீநகர், பூஞ்ச் மற்றும் குப்வாரா உள்ளிட்ட பல மாவட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணிகள் நடத்தப்பட்டன. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.