'நிறுத்துங்கள் புதின்; வாரம் 5 ஆயிரம் வீரர்கள் பலியாகின்றனர்' – கண்டனம் தெரிவித்த டிரம்ப்

வாஷிங்டன்,

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரால் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில், தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தார்.

ஆனால் அன்றைய தினத்திலும் ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டினார். இந்நிலையில், உக்ரைனின் தலைநகர் கீவ் அருகே இன்று அதிகாலை ரஷிய ராணுவம் மாபெரும் ஏவுகணை தாக்குதலை நிகழ்த்தியுள்ளது.

இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 63 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் கீவ் நகரின் மீது நிகழ்த்தப்பட்ட மோசமான தாக்குதல்களில் ஒன்று என இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ரஷியாவின் ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கீவ் நகரில் ரஷியா நடத்திய தாக்குதல் தேவையற்றது, மோசமான தருணத்தில் நடத்தப்பட்டுள்ளது. நிறுத்துங்கள் புதின்! வாரம் 5 ஆயிரம் வீரர்கள் பலியாகின்றனர். போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.