புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில் பாகிஸ்தானின் ராணுவம் தயார் நிலையில் இருக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா பதிலடி கொடுத்தால் அதை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாகா எல்லையை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்தது.
மேலும் இந்தியர்களுக்கான சார்க் விசாக்களை பாகிஸ்தான் நிறுத்தியது. இந்திய ராணுவ தூதரக அதிகாரிகளை அங்கீகரிக்கப்படாத நபர்களாக பாகிஸ்தான் அறிவித்தது. மேலும் விமானங்களுக்கு தடை விதித்து வான்வெளியை மூடியது பாகிஸ்தான். இந்தியர்களுக்கு சொந்தமான, இந்தியர்களால் இயக்கப்படும் விமானங்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்தது.
இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும் என்றும் சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைக்கும் உரிமையை பாகிஸ்தான் பயன்படுத்தும் என்று அந்நாட்டு பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து பாகிஸ்தான் பல்வேறு தடைகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டதை அடுத்து, விமானங்களை மாற்றுப் பாதையில் இயக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன்படி வட அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாற்றுப் பாதையில் விமானங்கள் இயக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 011 69329333, 011 69329999 தொலைப்பேசி எண்களை தொடர்புகொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.