“நேற்று வரை இலையாக இருந்தவர்கள் இன்று களையாக எப்படி மாறினார்கள்?” – சீமானுக்கு எதிராக சீறும் காளியம்மாள் நேர்காணல்

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் பி.காளியம்மாள் கடந்த பிப்ரவரியில் அந்தக் கட்சியிலிருந்து விலகினார். அப்போது, “தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வகையில் எம் பயணம் தொடரும்” என அறிவித்திருந்தவர், இதுவரை எந்தக் கட்சியிலும் இணையாமல் இருக்கிறார். இந்த நிலையில், நாதக-வில் தனக்கு என்ன நடந்தது… விலகலுக்கான காரணம்… எதிர்கால திட்டம் உள்ளிட்டவை குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் மனம்திறந்து பேசினார் காளியம்மாள்.

மீனவக் குடும்பத்தில் பிறந்து ஒரு சமூக செயல்பாட்டாளராக வளர்ந்த உங்களுக்கு நாதக அறிமுகம் எப்படி கிடைத்தது?

கடலோரப் பகுதி மக்​களின் பிரச்​சினை​களுக்கு தீர்வு காணும் வகை​யில், 15 கடலோர மாவட்​டங்​களை ஒருங்​கிணைத்​து, ‘தமிழக மீனவ பெண் தொழி​லா​ளர்​கள் சங்​கம்’ என்ற அமைப்பை ஏற்​படுத்​தி, அதன் மாநில பொதுச்​செய​லா​ள​ராக இருந்​தேன். கஜா புயல் பாதிப்​பின்​போது, மீன​வர்​களுக்கு முழு​மை​யான நிவாரணம் கிடைக்​காத நிலை​யில், அது குறித்து பேச வேண்​டும் என நாதக தரப்​பில் கேட்​டனர். அது தொடர்​பாக நாகப்​பட்​டினத்​தில் நடந்த கூட்​டத்​தில் முதன்​முதலில் பேசினேன்.

நான் பேசி முடித்​ததும் அண்​ணன் சீமான் அவர்​கள் என்னை பாராட்​டி​னார். ஒரு வாரம் கழித்​து, நாதக சார்​பில் 2019 மக்​கள​வைத் தேர்​தலில், வடசென்னை தொகு​தி​யில் நான் போட்​டி​யிட வேண்​டும் என்று அண்​ணன் என்​னிடம் பேசி​னார். “நான் அரசி​யலுக்கு வர விரும்​ப​வில்​லை. ஆனால், என் மக்​களுக்​கான அரசி​யல் தளத்தை உரு​வாக்க விரும்​பு​கிறேன்” என்று சொன்​னேன். “நீயே அந்த இடத்​துக்கு வர விரும்​ப​வில்லை என்​றால் உங்​கள் மக்​களுக்​கான அரசி​யல் தளத்தை எப்​படி உரு​வாக்க முடி​யும்?” என்று அண்​ணன் கேட்​டார். அதன் பிறகு தான் அந்த தேர்​தலில் போட்​டி​யிட்டு 60 ஆயிரத்​திற்​கும் மேற்​பட்ட வாக்​கு​கள் பெற்​றேன்.

உங்களை நாடறிந்த முகமாக மாற்றிய நாதக மீதும், சீமான் மீதும் உங்களுக்கு கசப்பு ஏற்படுத்திய நிகழ்வு எது?

என்​னைப் போல் பலருக்​கும் நாதக மேடை அமைத்து தந்​துள்​ளது. அந்த வாய்ப்பை நான் எம் மக்​களுக்​காக பயன்​படுத்​தினேன். நாதக-​வில் பயணித்​த​போது, சில மனக்​கசப்​பு​கள், கருத்து முரண்​கள் அவ்​வப்​போது வந்து சென்​றது. இரண்டு ஆண்​டு​களுக்கு முன்பே என்​னைப் பற்றி தவறான தகவல்​கள் தலை​மைக்கு தெரிவிக்​கப்​படு​வ​தாக தெரிய வந்​தது. அப்​போது அண்​ணன் சீமானை சந்​தித்​து, “என்​னைப் பற்றி தவறான தகவல்​கள் உங்​களுக்கு வரு​வ​தாக நான் கேள்​விப்​பட்​டேன்” என்று சொன்​னேன்.

அதற்​கு, “நான் உன்னை ஏதாவது கேட்​டே​னா… கட்​சி​யில் ஒரு​வர் வளர்ந்து வந்​தால் ஒரு சிலருக்கு அது முரணாகத்​தான் இருக்​கும். நான் உன்னை நம்​பு​கிறேன்​… நீ என்னை நம்​பலாம்” என்று நம்​பிக்​கையோடு பேசி அனுப்பி வைத்​தார்.

உங்களை விமர்சித்து சீமான் பேசிய ஆடியோ வெளியானதுதான் மனக்கசப்புக்கு காரணமா?

அந்த ஆடியோ வெளி​யான​போது நான் மனதள​வில் பாதிக்​கப்​பட்​டேன். அது எனக்கு பெரிய வலியை ஏற்​படுத்​தி​யது, நாம் என்ன செய்​தோம் என வருந்​தினேன். அந்த ஆடியோவை அண்​ணனுக்கு நான் தான் அனுப்பி வைத்​தேன். பிறகு, அண்​ணனுடன் இருக்​கும் மாநில பொறுப்​பாளர் ஒரு​வர் என்​னிடம் பேசி​னார். “அண்​ணன் ஒரு போதும் உன்னை தவறாகப் பேச​மாட்​டார்” என சமா​தானம் சொன்​னார். அதன்​பின், திரு​வாரூர் நிகழ்ச்​சிக்கு வந்த அண்​ணன் சீமான், “மன​தில் எது​வும் வைத்​துக் கொள்ள வேண்​டாம். உன்னை நான் என்​றுமே அப்​படி நினைக்க மாட்​டேன்” என்று சொன்​னார். அதன் பிறகு நிறைய கூட்​டங்​களில் பங்​கேற்​றேன். நான் நாதக-​வில் இருந்து வெளி​யேற காரண​மான சம்​பவங்​களை சொல்ல விரும்​ப​வில்​லை.

பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்து தனக்கென தனியாக கூட்டம் சேர்த்தார். கட்சி வளர்ச்சியை விட தனது வளர்ச்சியை பெரிதாக நினைத்தார் என சீமான் உங்கள் மீது குற்றம்சாட்டி இருந்தாரே..?

இது​வும் ஒரு ஆடியோ வடி​வில் வெளி​யான குற்​றச்​சாட்டு தான். எனக்​குள் எழுந்த கேள்வி என்​ன​வென்​றால், ஒரு கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் தனது தளப​தி​யிடம் ரகசி​ய​மாக பேசுவது எப்​படி பதிவு செய்​யப்​பட்​டது, அது எப்​படி வெளி​யானது, அவர்​களை கண்​டறிந்து ஏன் நடவடிக்கை எடுக்​க​வில்​லை, அத்​தோடு தொடர்ந்து ஆடியோக்​கள் வெளி​யா​வது குறித்து ஏன் முழு​மை​யான விசா​ரணை இல்லை என்​பது​தான்.

அந்த சூழலில் நான் அண்​ணனிடம், “ஏன் அண்ணா இப்​படி பேசினீர்​கள்? பணம் அல்​லது பரிசுப் பொருள் கொடுத்து கூட்​டம் நடத்த வேண்​டிய அவசி​யம் எனக்கு எதற்கு ஏற்​படு​கிறது? நான் என்ன நிலை​மை​யில் இருக்​கிறேன் என்​பதை என் வீட்​டுக்கு வந்து பாருங்​கள். சுனாமி குடி​யிருப்​பில் குடி​யிருக்​கும் நான் பணம் கொடுத்து கூட்​டம் சேர்க்க முடி​யு​மா?” என்று கேட்​டேன்.

அதற்​கு, “நீ ஆங்​காங்கே கூட்​டம் போடு​வ​தாக சிலர் என்​னிடம் சொன்​னார்​கள்” என்​றார். “அதை என்​னிடம் கேட்​டிருக்​கலாமே?” என்​றேன். “ஆமாம் நானும் உன்னை கேட்​டிருக்க வேண்​டும். அதற்​கான சூழல் அமைய​வில்​லை. சரி அதனை விடு, நமக்​கான அடுத்த களம் தயா​ராகி விட்​டது, நீ வேலை​யில் கவனம் செலுத்​து” என்​றார்.

தேர்தல் சமயத்தில் வெளிநாடுகளில் இருந்து கட்சிக்கே தெரியாமல் நீங்கள் பெருமளவு நிதி திரட்டியதாக சீமான் தரப்பு சொல்வது உண்மையா?

தேர்​தல் நேரத்​தில் பரப்​புரைக்​கான செல​வு​களுக்கு கூட வழி​யில்​லாமல் கஷ்டப்​பட்​டது தான் உண்​மை. தேர்​தல் செல​வுக்​காக நான் யாரிட​மும் பணம் கேட்​க​வில்​லை. சிலர் தங்​களால் முடிந்த தொகையை கொடுத்து உதவினர். இன்​னும் சொல்​லப்​போ​னால், பரப்​புரை வாக​னம், ஆடியோ செல​வு​களுக்​காக இன்​னும் ஒரு லட்ச ரூபாய் கொடுக்க வேண்​டிய கடன் தான் உள்​ளது.

நாதக-வில் உங்கள் வளர்ச்சியை சீமான் மனைவி கயல்விழி விரும்பவில்லை என்கிறார்களே?

காளி​யம்​மாளுக்கு ஏன் இவ்​வளவு முக்​கி​யத்​து​வம் கொடுக்​கிறீர்​கள் என்று அவர் பேசி​ய​தாக நான் அறிய​வில்​லை. அதனால், அவர் மீது அவதூறு பரப்ப விரும்​ப​வில்​லை. இன்​னும் சொல்​லப்​போ​னால், சீமான் என்னை விமர்​சித்த ஆடியோ வெளி​யான போது, என்னை தொடர்பு கொண்டு பேசிய கயல்​விழி என்னை சமா​தானப்​படுத்​தி​னார்.

பலரும் நாதக-வில் இருந்து விலகுவதை, “இலையுதிர் காலம் போல் எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம்” என்று சீமான் சொல்லியிருக்கிறாரே?

நேற்று வரை இலை​யாக இருந்​தவர்​கள் இன்று களை​யாக எப்​படி மாறி​னார்​கள் என்று அண்​ணன் பகுப்​பாய்வு செய்ய வேண்​டும். களையை பிடுங்​கு​வ​தாக கூறி விளைந்த பயிரை பிடுங்​கிப் போட்டு விடக்கூடாது இல்​லை​யா. பணம், பதவி, அந்​தஸ்​துக்​காக நாதக-​வில் யாரும் சேர​வில்​லை. ஆழமான தமிழ்த்​தேசிய உணர்​வோடு இந்தக் கட்​சி​யில் செயல்​பட்​ட​வர்​களுக்கு இந்​தக் கருத்து வருத்​தத்தை ஏற்​படுத்தி உள்​ளது. என்ன காரணத்​துக்​காக நம்மை விட்டு பிரி​கி​றார்​கள் என்று அண்​ணன் யோசிக்க வேண்​டும்.

இது என் கட்சி… நான் சொல்பவர்தான் நிர்வாகி, வேட்பாளர் என்று சீமான் சொல்வது பற்றி..?

மற்ற கட்​சிகள் அதி​காரத் தன்​மை​யுடன் முடி​வெடுப்பதை விமர்​சனம் செய்​யும்​போது, நாதக-​வில் ஜனநாயகம் இருக்க வேண்​டும் அல்​ல​வா. முடிவு எடுப்​பவர் தலை​வ​ராக இருந்​தா​லும், அதை ஜனநாயகபூர்​வ​மாக எடுக்க வேண்​டும். பல நேரங்​களில் அவர் எடுக்​கும் முடிவு சரி​யாக இருந்​திருக்​கலாம், ஆனால்​…

அமைச்சர் பொன்முடி பெண்களை தரக்குறைவாக பேசியதை கனிமொழி உடனடியாக கண்டித்தார். விஜயலட்சுமிக்கு எதிராக மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை சீமான் சொன்னதை புரட்சிப் பெண்ணான நீங்கள் கண்டிக்கவில்லையே?

பாதிக்​கப்​பட்ட பெண்​ணின் பக்​கம் நிற்க வேண்​டியது ஒரு பெண்​ணாக எனது கடமை தான். ஆனால், உண்​மை​யில் என்ன நடந்​தது, யாருக்கு பாதிப்பு ஏற்​பட்​டது என்ற கேள்வி​களுக்கு பதில் கிடைக்​க​வில்​லை. இவ்​வளவு நாள் அமை​தி​யாக இருந்​து​விட்டு இப்​போது ஏன் விஜயலட்​சுமி பேசுகி​றார் என்ற கேள்​வி​யும் இருந்​தது. மேலும், விஜயலட்​சுமி தனது குற்​றச்​சாட்​டில் உறு​தி​யாக நிற்​க​வில்​லை. அதோடு சீமானின் தனிப்​பட்ட வாழ்க்கை அது. அதில் விசா​ரணை எல்​லாம் செய்ய முடி​யாது.

திமுக, அதிமுக, தவெக என பல கட்சியில் இருந்தும் உங்களுக்கு அழைப்பு வருகிறதாமே?

எல்லா கட்​சிகளிடம் இருந்​தும் அழைப்பு வரத்​தான் செய்​யும். அதை ஏற்​ப​தா, எந்​தக் கட்​சிக்கு செல்​வது என்று இது​வரை முடி​வெடுக்​க​வில்​லை. மக்​கள் பிரச்​சினை​களுக்கு தீர்வு காணும் கட்​சி​யில் இணைவேன். அந்த முடிவை மே மாத இறு​திக்​குள் அறி​விப்​பேன்.

மாதா மாதம் குறிப்பிட்ட தொகையைத் தருவதாக இருந்தால் தவெக-வுக்கு வருவதாகச் சொன்னீர்களாமே?

ஒரு கட்​சி​யில் இருந்து இன்​னொரு கட்​சிக்கு செல்​லும் போது, கட்​சிப் பணி​யாற்ற பொருளா​தார தேவை இருக்​கும் என கேள்​விப்​பட்டு இருக்​கிறேன். அதற்​காக இப்​படி மாதச் சம்​பளம் வேண்​டும் என்​றெல்​லாம் கோரிக்கை வைக்க முடி​யு​மா? இப்​படி நான் எந்த கட்​சி​யிட​மும் எந்த டிமாண்ட்​டும் வைக்​க​வில்​லை.

கடலோர மக்களின் பிரச்சினைகளுக்கு ஆளுங்கட்சியால் உடனடியாக தீர்வு காண முடியும். அப்படி என்றால் திமுக-வில் இணைய வாய்ப்புள்ளதா?

ஏன் ஆளுங்​கட்சி என்று சொல்​கிறீர்​கள்​… ஆட்​சிக்கு வர வாய்ப்​புள்ள கட்​சி​யாக, சட்​டசபை​யில் பேசுவதற்கு வாய்ப்​புள்ள கட்​சி​யாகக்​கூட அது இருக்​கலாமே.

விஜய் கட்சியால் நாதக-வின் வாக்கு வங்கியில் கடுமையான சரிவு ஏற்படும் என்கிறார்களே?

வாக்கு சதவீதம் குறை​யுமா என்று ஆருடம் சொல்ல முடி​யாது. அதேசம​யம், புதி​ய​வர்​கள் அரசி​யலுக்கு வரவேண்​டும் என்ற எண்​ணத்​தோடு, மாற்று அரசி​யலை பலரும் விரும்​பு​கி​றார்​கள். அண்​ணன் விஜய்க்கு பெரிய ரசிகர் பட்​டாளம் இருக்​கிறது. அவர்​களை அரசி​யல்​படுத்த வேண்​டி​யுள்​ளது. மேலும், புதிய வாக்​காளர்​கள் புதிய கட்​சிகளை நோக்கி பயணிக்க வாய்ப்​புள்​ளது. அவர​வ​ருக்கு வாக்கு செலுத்த நினைப்​பவர்​கள் செலுத்​து​வார்​கள்.

தமிழக அரசியல் களம், சாதிக்க நினைக்கும் பெண்களை உண்மையிலேயே அரவணைத்துச் செல்கிறதா… அல்லது அடக்கிவைக்கவே நினைக்கிறதா?

நாட்​டின் மொத்த வாக்​காளர்​களில் பெண் வாக்​காளர்​கள் அதி​க​மாக இருக்​கும் போது, அவர்​களுக்​கான அரசி​யல் பங்​கேற்பு இல்​லாத நிலை தான் தொடர்​கிறது. அடை​யாளத்​திற்​காக மட்​டுமே சில கட்​சிகள் பெண்​களை நிறுத்​துகின்​ற​னர். பெண்​கள் அரசி​யலுக்கு வரு​வதற்​கான பயமும் இங்கு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

நான் அரசி​யலுக்கு வந்த போதும் பல கேவல​மான விமர்​சனங்​கள், அவமானங்​களை கடந்து வந்​துள்​ளேன். அரசி​யல் பின்​புலம் இல்​லாத குடும்​பத்​தில் இருந்து ஒரு பெண் அரசி​யலில் ஜெயிப்​பது என்​பது குதிரைக்கு கொம்பு முளைப்​பது போன்​றது தான். அதோடு, ஒரு பெண் வளர்ந்து ஆளு​மை​யாக வர வேண்​டும் என்​பதை சில பெண்​களே விரும்​புவ​தில்லை என்​பதும் வேதனை​யான உண்​மை.

பெண்​களுக்கு எதி​ராக நடக்​கும் கொடுமை​களை உண்​மை​யிலேயே தட்​டிக் கேட்​கும் எண்​ணம் எந்த அரசி​யல் கட்​சிக்​கும் இல்​லை. கட்​சி​யில் ஒரு ஆணுக்​கும் பெண்​ணுக்​கும் சமமான பொறுப்பு கொடுத்​தா​லும், அந்த இடத்​தில் பெண்​ணிடம் கருத்து கேட்​கப்​படு​வ​தில்​லை. அரசி​யலில் இருக்​கும் பெண்​கள் தவறு செய்​தால் அதை சுட்​டிக்​காட்​டுங்​கள்; அவர்​கள் வரவே வராத அளவுக்கு பின் தள்​ளி​வி​டாதீர்​கள். உண்​மை​யான அரசியல் பங்​கேற்​பை பெண்​களுக்கு வழங்​குங்​கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.